விஜய் நடித்துள்ள காவலன் திரைப்படத்தை வெளியிடும் முன் ரூ 15 கோடியை பாதுகாப்புத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் காவலன் படத்துக்கு திரையரங்குகள் பிரச்சினை மட்டுமல்ல, தயாரிப்பாளர் மீதான மோசடி வழக்கு, நிதி நெருக்கடி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடைசி வரை வருமா வராதா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இன்னொரு பக்கம் இந்தப் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், சர்வதேச விநியோக உரிமை பெற்ற சிங்கப்பூர் பட நிறுவனமான சந்திரா எண்டர்பிரைசஸ், விநியோக உரிமை பெற்ற சினிடைம்ஸ் எண்டர் பிரைசஸ் ஆகியவை சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த படத்தை வெளியிடும் விநியோக உரிமை பெற்ற சக்தி சிதம்பரம், விநியோக உரிமையை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்றதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் மலையாளத்தில் வெளியான 'பாடிகாட்' படத்தை விலைக்கு வாங்கிய கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம், தங்கள் அனுமதியின்றி படத்தை தயாரித்துவிட்டதாக இயக்குனர் சித்திக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, வழக்கு தொடர்ந்தவர்கள் கோரியுள்ள தொகையான ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் திட்டமிட்டபடி காவலன் படத்தை தயாரிப்பாளரே வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:
Post a Comment