Monday, January 24, 2011

விநியோகஸ்தரானார் இளையராஜா!

ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் கிரியேஷன்ஸ் மற்றும் இளையராஜா மூவீஸ் சார்பில் அவர் தயாரித்தவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். முதல் தரமானவையும்கூட. வெற்றியின் உச்சம் என்றால் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா எனலாம். 

ஆனால் சில ஆண்டுகளாக தயாரிப்பை நிறுத்தி வைத்துவிட்ட ராஜா, மீண்டும் தயாரிப்புப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார். அமிதாப்பின் பா பட உரிமை கூட அவரிடம்தான் உள்ளது.

இந்த நிலையில் விநியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார் இசைஞானி, செங்காத்து பூமியிலே படம் மூலம். 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களின் கதை வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கும் படம் இது. ராஜாவிடம் நீங்கள்தான் இந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக வந்து நின்றாராம் ரத்னகுமார். படத்தின் கதையைக் கேட்டதும், 'போய் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு வாருங்கள். நீங்கள் சொன்ன கதை இந்தப் படத்திலிருந்தால் இசையை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார் இசைஞானி. 

10 நாட்களில் எடுத்தவற்றைப் பார்த்ததும் திருப்தியடைந்த ராஜா, இசையமைக்க ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டாராம். 

 


 

இந்தப் பட விநியோகத்துக்கென்றே இளையராஜா ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். பெயர் சுவாமி கிரியேஷன்ஸ்!

 



"நல்ல சினிமாவை உற்சாகப்படுத்தவே இந்த முயற்சி" என்று ரத்தினச் சுருக்கமாக விளக்கமும் தந்துள்ளார் ராஜா.

No comments:

Post a Comment

Google Custom Search